கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்கள கடற்படை விவகாரத்தையே பேசினார்கள்.
தமிழகம் முழுக்கவே இப்படி என்றால், விஜயகாந்த் வில்லங்கத்தை விதைத்துச் சென்ற ராமேஸ்வரம் நிலவரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? விஜயகாந்த்துக்கு எதிராக அனலே பறந்தது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நடிகர் விஜயகாந்தின் பேச்சுக்கு ஒரு நடிகரைக் கொண்டே பதிலடி கொடுத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டது ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.
அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.
`வாடா, போடா, அடேய்' என்று விஜயகாந்தை குறிப்பிட்டு ரித்தீஸ் பேசிய பத்து நிமிடப் பேச்சுக்கு கூட்டத்தில் விசில் பறந்தது. ஒருகட்டத்தில் தன் பேரனின் பேச்சைக் கேட்டு சுப. தங்கவேலனே கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.
அப்படி என்னதான் பேசினார் ரித்தீஸ்?
``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.
ஒன்றியத் தலைவர் ஒருவர் பேசும் போது, ``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க வந்த மு.க. ஸ்டாலின், விஜயகாந்தை விளாசுவார் என்று ஒட்டுமொத்த கூட்டமும் ஏகப்பட்ட ஆர்வத்தோடு காத்திருக்க. அவரோ தனக்கு உடல்நலமில்லாத காரணத்தைச் சொல்லிவிட்டு, `கச்சத்தீவை மீட்பது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு' என்று பேசி ஐந்து நிமிடத்திலேயே தன் உரையை முடித்துக் கொண்டார்.
அன்றைய ராமேஸ்வரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்துக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்ததன் மூலம் ரித்தீஸ்தான் அன்றைக்கு ரியல் ஹீரோவாகி விட்டார்.
நாம் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
``விஜயகாந்துக்கு என்னங்க அரசியல் பின்பலம் இருக்கு? மக்களுக்காகப் போராட்டம் நடத்தி ஒரு தடவையாவது ஜெயிலுக்குப் போயிருக்காரா? அவருக்கு என்ன தகுதி இருக்கு, என் தலைவனையும் (கலைஞர்) என் தாத்தாவையும் (சுப. தங்கவேலன்) விமர்சனம் பண்ண? அரசியல் விமர்சனம் என்பது நாகரிகமா, ஆரோக்கியமா இருக்கணும். உடனே நீங்க, ராமேஸ்வரம் உண்ணாவிரதப் பந்தல்ல நான் விஜயகாந்தைப் பத்தி பேசினது மட்டும் நாகரிகமானதான்னு கேட்கலாம். விஜயகாந்த் மாதிரி ஆட்களுக்கு அப்படிப் பேசினாதான் புத்தியில் ஏறும். தவிர, பொதுக்கூட்டத்துல ஒன்றைப் பேசிட்டு அதை மறுநாளே மறுத்துப் பேசுற கோழை நான் கிடையாது. நான் ராமநாதபுரத்து மறவன். ஒரு நாக்கு... ஒரு சொல்தான் எனக்கு. அவரு பேசின பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டே ஆகணும். இல்லாட்டி இந்த மாவட்டத்துக்குள்ளே அவரு நுழையவே முடியாது!'' என்று வெடித்தவரிடம் நாம்,
`` `கலைஞரை இனி திட்டினா, விஜயகாந்துக்கு கருமாதிதான்' என்று நீங்கள் பேசியது மிகமிக அநாகரிகமில்லையா?'' என்று கேட்டோம். ``அவரு மட்டும் `தி.மு.க. காரர்களை சுட்டுத் தள்ளணும். கொல்லணும்னு பேசலாம், நான் அப்படி பேசக் கூடாதா? இதோ பாருங்க சார், கலைஞரோட அரசியல் அனுபவமும், வயதும் எவ்வளவு பெரிய விஷயம்? அவரோட நிழல் தன் மேலே படாதான்னு தொண்டர்கள் மட்டும் இல்ல, படிச்சவங்களே ஏங்கிக்கிட்டு இருக்காங்க. அவரைப் போய் `நீ...' `வா...' `போ'...ன்னு மரியாதை இல்லாம பேசுனா பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒரு தி.மு.க காரனா மட்டுமில்லே, என்னோட தாத்தா (சுப. தங்கவேலன்) என் ரத்தத்துல சின்ன வயசுலேயே ஊட்டி வளர்த்த திராவிடக் கழக உணர்வோடயும் சொல்றேன். கலைஞரைத் திட்டுறதை விஜயகாந்த் இனிமே அடியோட நிறுத்திக்கணும். இல்லேன்னா, அவருக்கு கருமாதிதான். உங்ககிட்டே சொன்ன இதே கருத்தை எத்தனை ஆயிரம் பேர் முன்னிலையிலும் நான் மறுபடி மறுபடி சொல்லுவேன். சொன்னதைச் சொல்லலேன்னு அந்தர்பல்டி அடிக்க நான் ஒண்ணும் கோழை இல்லே!'' என்றார் முகவை குமார் என்ற ரித்தீஸ்.
ஆக மொத்தத்தில்,அரசியலில் நாகரிகம் என்பது கவலைக்குரியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!
-நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
இனி கலைஞரை திட்டினால்! விஜயகாந்தை வெளுத்து வாங்கிய -நடிகர் ரித்திஸ்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, July 23, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment